October 21, 2020
தண்டோரா குழு
கோவையில் டிரான்ஸ் கிச்சன் என பிரியாணி உணவகத்தை ஆரம்பித்த சங்கீதா என்ற திருநங்கை கோவை சாயிபாபா காலனி பகுதியில் வீட்டில் உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுப்பட்டுள்ளார்.
கோவை சாயிபாபா காலனி பகுதியில் திருநங்கை சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். அவர் திருநங்ககைகள் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வந்தவர். மேலும் கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் தமிழகத்திலேயே முதல்முறையாக பிரியாணி விற்பனை உணவகத்தை ஆரம்பித்தார் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்று வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரது எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் , உடன் இருந்த திருநங்கைகள் இன்று அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.
அப்போது உடலில் வெட்டு காயங்களுடன் தண்ணீர் டிரம்பில் உடல் அடைக்கபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த திருநங்கைகள் சாயிபாபாகாலனி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர்,உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வரும் காவல்துறையினர் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் திருநங்கை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து வந்த மற்ற திருநங்கைகள் இப்பகுதிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது