May 26, 2021
தண்டோரா குழு
ஒண்றிணைவோம் வா எனும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கோவை தி.மு.க. மாநகர் கிழக்கு மாவட்ட 22 வது வட்டக்கழகம் சார்பாக,தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் என ஆயிரம் பேருக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.குறிப்பாக இதனால் ஏற்பட்டுள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு கழக தொண்டர்கள் ஒண்றிணைவோம் வா என ஆதரவற்றோர்களுக்கு உதவ ஆணையிட்டுள்ளார்.
இந்நிலையில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க.22 வது வட்ட கழகம் சார்பாக சாய்பாபா காலனி,22 வார்டு பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. வர்த்தக அணி துணை அமைப்பாளர் காலனி வினோத் ஆனந்த் தலைமையில் ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்,சமூக விலகலை கடைபிடித்து, அந்த பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சகல சன்மார்க்க ஆலயத்தின் ஆயர் சார்லஸ் சாம்ராஜ் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். தொடர்ந்து என்.எஸ்.ஆர். சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருவோரம் வசிப்போர், ஆதரவற்றோர் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இதில், தொண்டரணி துணை அமைப்பாளர் தளபதி மோசஸ், எஸ்.என். ரவி, பாஷாபாய், பகவான், பிரவீன், அசோக்,, மாரியப்பன், ராஜேஷ், சபரி , பரணி, ராம், சக்தி, கண்ணன், ஹரி, பேட்டை முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.