February 6, 2018
தண்டோரா குழு
கோவையில் கட்சி சார்ப்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர், வெள்ளியங்காடு, காரமடை உள்ளிட்ட பல்வேறு விவசாய பகுதிகளில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களுக்குள் யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைவதுடன் உயிர்சேதமும் ஏற்படுவதாக குற்றம்சாட்டி, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளான வன விலங்குகளிடமிருந்து விவசாய பயிர்களையும், மனித உயிர்களையும் காப்பாற்ற வேண்டும், விவசாய கடன் முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும், அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பட்டது.
யானைகள் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம், வன இலாகாவினரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.