March 8, 2021 தண்டோரா குழு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி,80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டு தபால் வாக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கோவையில் தபால் வாக்கு அளிப்பதற்கு அவர்களது இருப்பிடத்திற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று, அவர்களுக்கு படிவம் 12-டி வழங்கப்பட்டு வருகிறது. இதில் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாதவர்கள் விருப்பம் இருந்தால் வாங்கிக்கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
‘‘கோவை மாவட்டத்தில் பத்து சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 64 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குகளுக்கான விண்ணப்பம் விநியோகப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதனை பெற்றுக்கொள்பவர்கள் அதற்கான உரிய சான்றிதழையும் இணைக்க வேண்டும்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12-டி படிவத்தினைவரும் 15ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.