August 8, 2021
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. அங்கு ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் ஹோட்டல் பணியாளர்கள் அறையை திறந்து பார்த்த போது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
மேலும் அதே அறையில் ஒருவர் பலத்த காயங்களோடு உயிருடன் இருந்துள்ளார். இது குறித்து உடனடியாக ஹோட்டல் பணியாளர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயங்களுடன் இருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கும் போது இருவரும் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தப்பா(58) மற்றும் பிந்து(46) என்பதும் கடந்த 26ம் தேதி இங்கு அறை எடுத்து தங்கி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அறை திறக்கப்படாமல் இருந்ததும் இன்று அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் அறையை திறந்து பார்க்கையில் இது போன்று இருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.