April 17, 2019 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரை அதே மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் தனது தனியார் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து சென்று சிகிச்சை கொடுத்ததில் ஏற்பட்ட அலட்சியத்தால் தாயும் சேயும் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிவானந்தா காலனி பகுதியில் வசித்து வருபவர் நிர்மலா 35,சுரேஷ் 38, தம்பதியினர். நிர்மலா கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக கடந்த ஆறு மாதம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில்,அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் திலகவதி செவிலியர் நிர்மலாவிற்கு தனது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். இதில் பிரசவத்திற்காக சிகிச்சை அளிக்க மருத்துவர் திலகவதி இல்லாததால் செவிலியர் மட்டுமே சிகிச்சை அளித்துள்ளார்.
மேலும் பிரசவ வலியால் துடித்து வந்த நிர்மலா திலகவதிக்கு செல்போன் மூலம் அழைத்து பேசியும் 3 மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய சிகிச்சை கொடுக்காததால் வயிற்றிலேயே குழந்தை இறந்துள்ளது. இதையடுத்து நேற்று கர்ப்பிணி பெண் நிர்மலாவும் உயிர் இழந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் திலகவதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையில் மாறிமாறி சிகிச்சை அளித்து வந்த அலட்சியத்தால்தான் அநியாயமாக செவிலியரின் உயிர் பறிபோனது என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.