February 8, 2019 தண்டோரா குழு
கோவையில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் தவர விட்டத்தினால் கீழே விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் போதுமக்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று விக்ரம் பவித்ரா என்ற தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இறப்பின் காரணத்திற்கு மருத்துவமனை தரப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. பின்னர் இறந்த குழந்தையை பெற்றோரிடம் தரும்பொழுது தலையில் தொப்பி அணிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர் தலையில் அணிவித்திருந்த தொப்பியை கழட்டி பார்த்தனர். அதில் குழந்தையின் தலையில் காயம் இருந்துள்ளது.
இதையடுத்து, ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தில் விசாரித்த பொழுது குழந்தை மருத்துவர்கள் கையிலிருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இறந்த குழந்தையை கையில் வைத்தபடி பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இன்று மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுவரை எந்தவித பேச்சு வார்த்தை கூட நடத்தாதது கண்டிக்கத்தக்கது எனவும் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.