April 12, 2019 தண்டோரா குழு
கோவை திருச்சி சாலையில் உள்ள ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்தில் கணக்கில் இல்லாத பணங்கள் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர் .
ஜீரோ கிராவிட்டி நிறுவனமானது திருமணம், கலை நிகழ்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.இது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகள் உள்ளது. இதில் கோவை முக்கிய கிளையாக செயல்பட்டு வருகிறது.மேலும் கோவை திருச்சி சாலை கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் அருகே உள்ள இந்த நிறுவனத்திற்கு நேற்று மாலை 8 மணி அளவில் வருமானவரித்துறையினர் புகாரின் அடிப்படையில் திடீர் சோதனையில் ஈடுபட வந்தனர்.
அப்போது உரிமையாளர் இல்லாததால் ஊழியர்களுக்கு அறிவிப்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஊழியர்களும் சரியான தகவல்கள் கொடுக்காமல் வீட்டிற்கு சென்று விட்டதை அடுத்து காவல்துறையினர் சோதனை நடத்துவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர் வந்தவுடன் வருமானவரித்துறையினர் தொடர் சோதனை மூலம் புகாரில் வந்ததுபோல கணக்கில் இல்லாத பணங்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.