February 4, 2019 தண்டோரா குழு
கோவை அருகே தனியார் கல்லூரி மாணவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டிணம் மாவட்டம் ராதாமங்கலம் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவரது மகன் ஹரிஹரன்.இவர் கோவை கோவில்பாளையம் அடுத்த கோட்டைபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஏசியன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மெக்கானிக்கல் பிரிவில் பயின்று வருகிறார்.மேலும் கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ள விடுதியில் தங்கி பயின்று வரும் அம்மாணவன் சமீப காலமாக கடும் மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் இரண்டு மணி வரை யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்த அம்மாணவன் இன்று காலை வழக்கம் போல் வெளியே வராததால் சந்தேகமடைந்த அடுத்த அறையில் தங்கியிருந்த மாணவர்கள் சிலர் ஹரிஹரன் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே பார்த்தபோது ஹரிஹரன் அங்கிருந்த மின்விசிறியில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக கதவை உடைத்து மாணவனை காப்பாற்ற முற்பட்டபோது ஏற்கனவே உயிற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து விடுதி காப்பாளர் மூலம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற கோவில்பாளையம் காவல்நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.