November 16, 2019 தண்டோரா குழு
கோவை ரத்தினபுரியை சேர்ந்த 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தினபுரி சுப்ரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் உதயகுமார் தீபா தம்பதியினர். இவர்களது குழந்தை யோகா ஸ்ரீ (7). டாடாபாத் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். குழந்தைக்கு கடந்த 13ம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது. தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தற்போது அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இப்பகுதியை சேர்ந்த பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு இப்பகுதியில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இங்கு உள்ள சங்கனூர் ஓடையில் இருந்து அதிக கொசுக்கள் உற்பத்தியாவதாகவும், முறையான சுகாதார நடவடிக்கைகள் இல்லை என்பதாலும் உயிர்பலி தொடர்வதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.