January 28, 2019 தண்டோரா குழு
சொத்தை எழுதிதர கட்டாயப்படுத்தி, பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மண்ணெண்ணெய் கேனுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்காவிற்கு உட்பட்ட நெகமம் செட்டிபுதூர் பகுதியைச்சேர்ந்தவர் ரங்கநாயகி(65). இவரது கணவர் பழனிச்சாமி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார். ரங்கநாயகியின் தாயார் மூலமாக மூன்றே முக்கால் செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தன் பெயருக்கு எழுதி கொடுக்க வலியுறுத்தி லாரி ஒட்டுநரான ரங்கநாயகியின் மகன் தண்டபானி , அவரை அடித்து துன்புறுத்துவதாகவும், சாப்பிட உணவளிக்காமல் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்தார்.
இது குறித்து தனது மகள் கவிதாவிடம் கூறியபோதும் எவ்வித தீர்வும் கிடைக்காததால், நெகமம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறை நடவடிக்கை எடுக்காததால், வீட்டில் இருந்து துரத்தப்பட்டார். இதனையடுத்து கடந்த மூன்று மாத காலமாக சாலை ஒரங்களிலும், கோவில் வாசலிலும் தங்கி வந்துள்ளார். அங்கும் இவரை தங்கவிடாமல் துரத்துவதாக கூறி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்தவர், மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருப்பதை அறிந்த பந்தய சாலை காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை அழைத்துச்சென்றனர்.