February 20, 2019
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற நம்ம ஊரு சாப்பாடு உணவு திருவிழாவில் சேர,சோழ,பாண்டிய நாட்டின் பழமையை நினைவு கூறும் வகையில் பல்வேறு உணவு வகைகள் இடம் பெற்றுருந்தன.
கோவை விமான நிலையம் அருகில் உள்ள மேரியோட் குழுமத்தின் ஃபேர் பீல்டு ஓட்டலில் தமிழர் உணவுத் திருவிழா 2.0 நடைபெற்றது. இன்று துவங்கி 7 நாட்கள் நடைபெற உள்ள இதில் பழமையை போற்றும் பல்வேறு வகையான உணவு வகைகள் இடம்பெற்றன. ஓட்டலின் தலைமை சமையல் கலை நிபுணர் சோமு தலைமையில், கோவையில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் தமிழகத்தின் கொங்கு,நெல்லை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பிரபல உணவு வகைகள் இடம் பெற்றன.
அசைவ வகைகளில் ஆம்பூர் பிரியாணி, மட்டன் கோலா,சுறா மீன் புட்டு,,மதுரை நாட்டுக்கறி தோசை,விருது நகர் புரோட்டா செட்டிநாடு சிக்கன் மேலும் சைவ வகையில் தமிழர் உணவான கம்பு,ராகி,வாழைப்பூ வடை, மற்றும் மூலிகை ரசம் என தமிழர் உணவு வகைகள் இடம் பெற்றன. இனிப்பு வகைகளில் அதிரசம்,நிலக்கடலை உருண்டை,தேங்காய் பர்பி மற்றும் மதுரை ஜிகிர்தண்டா,நன்னாரி சர்பத் என தமிழர் உணவு பரிமாறப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டல் பொது மேலாளர் பரத்,
இந்த தமிழர் உணவு திருவிழா எங்களது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் நமது தமிழர் பண்பாட்டு உணவை ரசித்து சுவைப்பதாக கூறினார். இதில் தினசரி 70 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சேர,சோழ,பாண்டிய நாட்டு சுவையுடன் தயாரித்து வழங்க உள்ளதாக தெரிவித்தார்.