June 2, 2021
தண்டோரா குழு
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினர்.
அந்த போராட்டமானது வைரஸ் தொற்று பரவலினால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் சமீபத்தில் அந்த சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று மத்திய அரசு தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் அதற்கான கண்டன ஆர்ப்பாட்டங்கள் துவங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முஸ்லீம்லீக் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமுமுக கோவை வடக்கு மாவட்ட தலைவர் அகமது கபீர் தலைமையில் உக்கடத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கரும்புக்கடை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர், செல்வபுரம், சூலூர், ஒண்டிப்புதூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தமுமுக வினர் மற்றும் சில பொதுமக்கள் அவர்களது வீட்டின் முன் முன்பு குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் வகையில் பதாகைகளை ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சாதிக் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி ஜெம் பாபு, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், துணைத் தலைவர் சிராஜூதீன், தமுமுக துணைச் செயலாளர்கள் சாகுல், ரஜாக், ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணைச் செயலாளர்கள் பஷீர், நூறுதீன், அப்துல் அக்கீம், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் இன்னும் ஏராளமான தமுமுக மமக உறுப்பினர்கள் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.