January 19, 2019 தண்டோரா குழு
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 ஆடுகள், 5 கோழிகள் உள்ளிட்டவை உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூளுவப்பட்டி பகுதியில் ஏராளமான விவசாய பண்ணைகள் உள்ளன. இதே பகுதியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று இரவு 5 ஆடுகள் மற்றும் கோழிகளை அடைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். காலையில் வந்து பார்த்த போது 5 ஆடுகளும் 5 கோழிகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்ட வனத்துறையினர் ஆடு மற்றும் கோழிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர்.தொடர்ந்து உயிரிழந்த
ஆடுகளை சிறுத்தை தாக்கியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் இழப்பீடு கோரியுள்ளனர். இது தொடர்பாக பேசிய அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் கூண்டு வைத்து வனத்துறையினர் ஒரு சிறுத்தை புலியை பிடித்து சென்று வேறு பகுதியில் விட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் சிறுத்தை புலி தாக்கியுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். எனவே குட்டியுடன் சுற்றித்திரியும் சிறுத்தை புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் எனவும் உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே இப்பகுதிகளில் யானை தாகுதல்களால் காரணமாக உயிரிழப்புகளும், காட்டு பன்றிகளால் விவசாய விளைபொருட்கள் இழப்பும் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது சிறுத்தை புலி தாக்குதல் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.