January 24, 2019 தண்டோரா குழு
கோவையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித் திரியும் சின்னத்தம்பி என்ற காட்டு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக இரண்டு கும்கி யானைகள் கோவைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வரப்பாளையம், சோமையனூர், சின்னதடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது நுழைவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து கடந்த மாதம் விநாயகன் என்ற கட்டு யானையை பிடித்த வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்தனர்.
இந்நிலையில், தற்போது சின்னத்தம்பி என்ற காட்டு யானையை பிடிக்கும் நடவடிக்கைக்கு முன்னோட்டமாக அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனவே இந்த யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானையும், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து முதுமலை என்ற யானையும் கோவைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். யானை நடமாட்டம் இருக்கும் பகுதியை வனத்துறையினர் அறிந்து உள்ளதால் விரைவில் அதனை பிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.