June 17, 2019 தண்டோரா குழு
குருநாதன் என்று சித்த மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால் இளம்பெண் இறந்ததாக கூறி அந்த சித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவைபுதூர் நேதாஜி நகரை சேர்ந்த கணேசன் – மல்லிகா தம்பதியினர் மகள் சத்யப்பிரியா (20). கோவை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொலிடிக்கல் சயன்ஸ் படித்து வந்தார்.மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தவர் உறவினரின் அறிவுறுத்தலின் பேரில்செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலையில் சித்த மருத்துவர் குருநாதனிடம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சத்யப்பிரியாவுக்கு சித்த மருத்துவர் குருநாதன் தந்த மருந்துகளால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சத்ய பிரியா ஆபத்தான நிலையில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மே 1ம் தேதி சித்த வைத்தியர் குருநாதன் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என சத்யப்ரியாவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த மே31ம் தேதி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு சிசிச்சை பலனின்றி சத்யப்பிரியா உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சித்த வைத்தியர் குருநாதனை கைது செய்ய வலியுறுத்தியும், செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை அரசு மருத்துவமனை முன் சத்யப்ரியாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.