September 20, 2019 தண்டோரா குழு
கோவை காந்திபுரம் எதிரே உள்ள நேரு தெரு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடைக்கு 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த 15ஆம் தேதி மது அருந்துவதற்காக செல்கிறார். மது அருந்திவிட்டு அந்த பாரில் உள்ள கடையில் 10 ரூபாய் கொடுத்து சிகரெட் கேட்கிறார் சிகரெட் விலை 15 ரூபாய் என்று அங்கு வேலை பார்க்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிரி (வயது 29), கூறுகிறார். இதில் அந்த குடிகாரருக்கும் பாரில் வேலை செய்ய செய்தவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த பாரில் வேலை செய்யக் கூடியவர்கள் சரமாரியாக தாக்கி அவரை வெளியே கொண்டு வந்துவிட்டுள்ளனர்.
அப்பொழுது மேலாளர் கௌதம் அங்கு வந்துள்ளார். அவரிடமும் அந்த குடிகார ஆசாமி தகராறில் ஈடுபட உடனடியாக கௌதம் பாரில் உள்ள சைனீஸ் கரண்டியை எடுத்து தலையில் சரமாரியாக தாக்கி மீண்டும் வெளியே வந்து விட்டுள்ளனர். குடிகார ஆசாமி தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து கோவை நஞ்சப்பா ரோட்டில் மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கோவை காந்திபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் உதவியோடு காந்திபுரம் போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 16-ஆம் தேதி சிகிச்சை பலனில்லாமல் அந்த குடிகார ஆசாமி இறந்துவிடுகிறான். இதில் போஸ்ட் மார்ட்டத்தின் அறிக்கை நேற்று மதியம் போலீசாருக்கு அனுப்பப்படுகிறது. அதில் கூர்மையான ஆயுதம் கொண்டு தலையில் தாக்கியதில் கபாலம் உடைந்துள்ளதாக கூறப்பட்டுருந்தது. அதன் அடிப்படையில் மத்திய உதவி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்கின்றனர். அப்பொழுது மேலாளர் கெளதம் மற்றும் அங்கு வேலை செய்பவர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட காட்சி தெரியவருகிறது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் (26),கிரி (29), வினோத் (26), மற்றும் திருப்பூரைச் சேர்ந்த பாபு என்கிற சியான் (46) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இறந்த நபர் யார்? ஊர் பேர் என்ன? என்பது குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.