May 21, 2021
தண்டோரா குழு
கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் கொரோனாவை வென்று அனைவருக்கும் நம்பிக்கை யூட்டியுள்ளார்.
கொரோனா 2-வது அலை நாட்டையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக. நோய் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் இளம் வயதினரும் அதிகம் தற்போது இந்த நோயால் பலியாகி வருகின்றனர்.இந்நிலையில் கோவையை சேர்ந்த 95 வயது முதியவர் கொரோனா தடையை தகர்த்து நோயில் இருந்து குணமடைந்து இளைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர், பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பழனிசாமி. 95 வயதான இவருக்கு சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டது.செல்வபுரம் பகுதியில் உள்ள சினேகராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து மருத்துவர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர்,அவருக்கு சிகிச்சை அளித்தனர்.இளம் வயதினரே பலரும் இந்த நோயால் உயிரிழந்து வரும் நிலையில், துவண்டுபோகாத முதியவர் தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை ஏற்றுக்கொண்டு,மருத்துவர்கள் செவிலியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். இதன் பலனாகவும், அவர் மன தைரியத்தின் காரணமாகவும் கொரோனா நோயுடனான போராட்டத்தில் வெற்றி பெற்று பூரண குணமடைந்தார்.
இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து,அவர் வெளியேறும் போது, மருத்துவர்கள், செவிலியர்கள்,மற்றும் ஊழியர்கள் என பலரும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.