May 5, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனாவால் ஊரடங்கு பிறபிக்கப்பட்டிருந்த காலத்தில் பணியாற்றிய காவலர்கள், துப்புரவு பணியாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு கூறியிருந்தது.அதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன் கோவையில் காவல்துறையினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் 6 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பி எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அவர்கள் 6 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்.அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி,கோவை மாநகர காவல் ஆணையர் சுஜித் குமார் ஆகியோர் மலர் செண்டுகளை அளித்தும் பழங்களை அளித்தும் கைத்தட்டி வழி அனுப்பி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்,
கோவையில் வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தடையில்லா பகுதிகளில் தளர்வு இருப்பினும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கோவையில் 146 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 139 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனையால் உயிரிழந்துள்ளார். மீதம் ஐந்து பேர் மட்டுமே கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும்,சென்னை மற்றும் கேரளாவில் இருந்து வரும் நபர்களை முழுமையாக கண்காணித்து கோவையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசங்கள் அணிந்திருக்கும் தடைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் இதை மீறுபவர்கள் மீது கட்டாயம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.