April 7, 2019
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணி, அங்கிருந்த பெண்களின் கைகளில் தாமரையை மெகந்தியாக வரைந்து வாக்கு சேகரித்தனர்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 18-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் கோவை தொகுதியில் சி.பி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
அவருக்காக பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் திரண்ட அக்கட்சி மகளிர் அணியினர், அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் கைகளில் தாமரையை மெகந்தியாக வரைந்தனர்.
இதுமட்டுமின்றி, பாஜகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வழங்கியும் அவர்கள் வாக்கு சேகரித்தனர்.