January 28, 2019
தண்டோரா குழு
கேபிஎன் சொகுசு பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணியை வேனிலும்,பேருந்திலும், கூட்டிச்சென்று மீண்டும் வேறு பேருந்தில் ஏறச்சொன்னதை தட்டி கேட்ட பெண் மற்றும் அவரது கணவரை அடித்து உதைத்த ஒட்டுநர் மற்றும் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
கோவை வீரகேரளம் பகுதியைச்சேர்ந்தவர் ஸ்ரீ வைஷ்ணவி. இவர் அப்பகுதியில் அலங்காரப்பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிக்கு உறவினர்களை அழைக்க பாண்டிச்சேரி சென்றுள்ளார். அப்போது அவர்களை அழைத்துவிட்டு நேற்றிரவு கேபி என் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 1430 ரூபாயில் இரண்டு டிக்கெட் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து நேற்றிரவு பாண்டிச்சேரியில் இருந்து 8.30 மணியளவில் திண்டிவனம் வரை வேனில் கொண்டு வந்து விட்டுள்ளனர்.அங்கிருந்து கோவைக்கு பேருந்தில் மாற்றி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இரவு இரண்டு மணியளவில் பேருந்து ஆத்துரை வந்தடைந்தவுடன் , மீண்டும் மற்றொரு பேருந்தில் பயணிகளை ஏற ஒட்டுநர் ராஜீ என்பவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட வாக்கு வாதத்தின் போது ஸ்ரீவைஷ்ணவியை ஒட்டுநர் அடித்து, உதைத்து மானப்பங்கப்படுத்தியுள்ளார்.
இதனைப்பார்த்த அவரது கணவர் சிவராஜ் ஒட்டுநரிடம் கேள்வி எழுப்பிய போது அவரையும் அடித்துள்ளார். குடிபோதையில் இருந்த ஒட்டுநர் குறித்து கேபி என் பொதுமேலாளரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவி அவரது கணவர் சிவராஜ் ஆகியோர் புகாரளித்தனர்.