April 16, 2019 தண்டோரா குழு
கோவை கெம்பட்டி காலனியைச்சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கார்த்தி என்கிற தேங்காய்பால் கார்த்தி (36 ). கார்த்தி மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் இருக்கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு விடுதலையாகி வந்ததாக
தெரிகிறது.
இந்நிலையில் கடை வீதி காவல் நிலையத்தினர் கார்த்தி மீது கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் இருந்து கைதியை நேற்றிரவு 9.15 மணியளவில் நீதிபதி வீட்டிற்கு அழைத்துச்செல்ல இருந்தபோது, திடீரென கார்த்தி மயங்கி விழுந்து இறந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது கார்த்தி இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். கைதி வலிப்பு வந்து இறந்துள்ளாரா அல்லது சயனைடு சாப்பிட்டு இறந்தாரா என்பது குறித்து உடற்கூறாய்விற்கு பிறகே தெரிய வரும். காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்ததால், இச்சம்பவம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற இருக்கிறது.