January 31, 2018
தண்டோரா குழு
கோவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி சங்கர மட விஜயேந்திரரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கோவை அன்னூரில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி சங்கர மட விஜயேந்திரரை கண்டித்து அவரது உருவபடத்திற்கு செருப்பு மாலை அணிவித்து உருவப்படத்தை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், அன்னூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரரை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்து விட்டதாக கூறி அவருக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
அன்னூர் பயணியர் மாளிகை முன்பு கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் சந்திரசேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தின் போது விஜயேந்திரரை போல் ஒருவர் வேடமடைந்திருந்த நபருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் வரும் மூன்றாம் தேதிக்குள் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை மணிமண்டபத்தில் நேரிடையாக வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. ஆர்பாட்டத்தின் இறுதியில் விஜயேந்திரரின் உருவ படங்கள் எரிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவற்றை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அன்னூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.