December 26, 2019
கோவை ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் கல்லூரி பேராசிரியைக்கு, தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் பணிநிமித்தமாக கல்லூரி செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவர் தினமும் அவரை பின்தொடர்ந்து வந்தும், புகைப்படம் எடுத்தும் மிரட்டி வந்துள்ளார். இந்தநிலையில் நாளுக்கு நாள் மணிகண்டனின் தொல்லை அதிகமாகியதால் பயந்துபோன பேராசிரியை அவரது தந்தையிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.
இப்படியிருக்க பேராசிரியையின் தந்தை இன்று பாதுகாப்புக் காரணம் கருதி தனது மகளை ராமநாதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏற்றி விட சென்றிருந்தார்.அப்போது அங்கு வந்த இளைஞர் மணிகண்டனை எதற்காக என் மகளை பின்தொடர்கிறாய்? என்றும் ஏன் புகைப்படம் எடுத்து மிரட்டுகிறாய் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதில் அவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, பேராசிரியையின் தந்தை ராமநாதபுரம் காவல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் முருகேசன் உத்தரவின் பேரில் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
மேலும், அவர் மீது 506(ii), 75, மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.