May 17, 2019
கோவை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கலை கல்லூரி சாலையில் கட்டைப்பையில் , கதறி அழுது கொண்டிருந்த பிறந்து ஏழு நாட்களான குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சந்திரசேகர்(19)மற்றும் சத்தியதரன்(18). இவர்கள் இருவரும் நேற்று இரவு தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டு கலைக்கல்லூரி சாலை வழியாக தங்களின் இருப்பிடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் குழந்தையின் அழுகை சத்தம் தன்னந்தனியே கேட்பதை கண்டு நோட்டமிட்டனர்.
அப்போது அரசு மருத்துவமனையின் பின் வாசலின் அருகே உள்ள நடைபாதையில் இருந்த கட்டைப்பையில் பிறந்து சுமார் ஏழு, எட்டு நாட்கள் ஆன ஆண் குழந்தை ஒன்று கதறி அழுது கொண்டிருந்தது. இதைக்கண்ட மாணவரில் ஒருவர் குழந்தையை பாதுகாத்தபடி நின்றார். மற்றொருவர் கோவை அரசு மருத்துவமனைக்கு தகவல் சொல்ல சென்றார்.பின்னர் குழந்தையை உடனடியாக பாதுகாக்க 108 ஆம்புலன்சிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மாணவர்கள் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மருத்துவர்கள் குழந்தையின் உடல் நிலையை பரிசோதித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து குழந்தைகள் நலத் துறையினரும், பந்தய சாலை போலீசாரும் குழந்தையின் தாய் யார் எப்படி சாலையில் விடப்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில் தொடர்ச்சியாகவே சாலை ஓரங்களில் குழந்தைகளை அனாதையாக தவிக்க விட்டு செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.