April 12, 2021
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் நேற்று இரவு 10.20 மணியளவில், உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பெண் உட்பட பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் கடுமையாக தாக்கினார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். மேலும், சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவையில் உணவகத்திற்குள் புகுந்து பெண்கள் உள்ளிட்டோரை காவல் உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கிய சம்பவத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குல் நடத்திய சம்பவம் பற்றி மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.