February 12, 2018
தண்டோரா குழு
கோவை சுக்கிரவார்பேட்டையிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏடிஎம் இல்கொள்ளை முயற்சி நடந்தையடுத்து, தடயங்களை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோவில் அருகே உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(பிப்12)அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு பணம் எடுப்பது போல ஏ.டி.எம் மையத்திற்குள் முகத்தை மறைத்தபடி சென்றுள்ளார்.
பேக்கிற்குள் மறைத்து வைத்திருந்த கம்பியால் ஏ.டி.எம் மெஷினை உடைக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த சப்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்தவர் விளக்கு போட்டு பார்க்கும்போது கொள்ளையடிக்க வந்த நபர் தப்பிவிட்டார்.
இதனையடுத்து ஆர் எஸ் புரம் காவல்துறையினர் பதிவாகியுள்ள கை ரேகைகள்,மற்றும் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டும் , கொள்ளையர் குறித்த தகவல்களை திரட்டி வருகின்றனர்.
கோவையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் காளப்பட்டி சாலை மற்றும் அவினாசி சாலையில் உள்ள ஏ.டி.எம்களில் கொள்ளை நடைபெற்றது.இந்த சம்பவம் தொடர்பாக வட மாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும்ஒரு ஏ.டி.எம் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.