December 22, 2016
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செயல்படாத நிலையில் இருந்த இந்தியன் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கடந்த நவம்பர் 8ம் தேதி அமல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக மக்கள் மத்தியில் பணபுழக்கம் தடைபட்டு பணம் எடுக்க மக்கள் வங்கிகள் முன்பாகவும் , ஏ.டி.எம். இயந்திரங்கள் மையம் முன்பாகவும் நாள்தோறும் காத்திருக்க வேண்டியுள்ளது.
கோவையில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் 90 சதவீத ஏ.டி.எம். இயந்திரங்கள் செயல்படவில்லை. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக செயல்படாத நிலையில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையல் மலர்மாலை வைத்து, நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கி ஏ.டி.எம். இயந்திரங்கள் அனைத்தும் முழுமையாகச் செயல்பட வேண்டும். 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் தடையின்றி கிடைக்க வேண்டும். 500 ரூபாய் 1000 ரூபாய் பணத்தை வங்கிகளில் மாற்றுவதற்காகக் கெடுவை நீடிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.