April 5, 2019 தண்டோரா குழு
தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற திமுக வேட்பாளரான சண்முக சுந்தரத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தொண்டாமுத்தூர் பகுதியில் நேற்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது உள்ளாட்சித் துறையில் 100 கோடி ரூபாய் அளவில் டெண்டர்கள் அனைத்தும் உள்ளாட்சி துறை அமைச்சரின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் ஊழல் பணத்தை குவித்து வைத்திருக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முதல்வரையே மிரட்டுவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.மேலும் ஊழலில் முதல்வரையே மிஞ்சியவர் அமைச்சர் எஸ் பி வேலுமணி எனவும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை அமைச்சர் எஸ் பி வேலுமணி காப்பாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் உண்மைக்கு புறம்பான தகவலை எவ்வித ஆதாரமும் இல்லாமல் மு க ஸ்டாலின் அவதூறாக பேசியதாகவும் இது அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும் கூறி அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் நேற்றைய தினம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் 153A,504,125 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதேபோல் குனியமுத்தூர் பகுதியில் அவதூறு பேசியதாகவும் குனியமுத்தூர் காவல் நிலையத்திலும் மு க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.