June 18, 2021
தண்டோரா குழு
கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசின் பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வலியுறுத்தலுக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்பும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மேற்கு மண்டலத்தின் மையமாக கோவை மாவட்டம் உள்ளது. மருத்துவ கேந்திரமான மாவட்டமாகவும் கோவை மாவட்டம் திகழ்கிறது. இங்கு கோவை மட்டுமல்லாது திருப்பூர், நீலகிரி, ஈரோடு,சேலம்,நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்திய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மோடி அவர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு தேவையான முக்கியமான கோரிக்கைகள் குறித்த பட்டியலை அளித்து வலியுறுத்தியுள்ளார். இதில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற வலியுறுத்தலும் முக்கியமானது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்தது.நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இத்தொற்றினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வந்தனர். கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தொற்று மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து சுமார் ஒரு மாத காலத்திற்குள்ளாக தீவிரமான நடவடிக்கையின் காரணமாக தற்போது இத்தொற்று மிக கனிசமாக குறைந்துள்ளது.இதற்கு பிரதானமாக மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியதே முக்கியமான காரணமாகும்.
இதனிடையே மூன்றாவது அலை வரும் அது குழந்தைகளை பாதிக்கும் என்கிற மருத்துவத்துறையினரின் எச்சரிக்கையை உள்வாங்கிக் கொண்டு தற்போது இருந்தே இதற்கான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கும் முனைப்பில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்பது அனைவரின் கவனத்தை ஈர்த்த ஒன்று என்பது அரசியல் எதிரிகள்கூட மறுக்க இயலாத ஒன்றாகும். அந்தவகையில் திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் இதற்கான நடைமுறைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது உள்ளபடியே மகிழ்வை ஏற்படுத்துகிறது.அந்த வகையில் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என இந்திய ஒன்றியத்தின் பிரதம அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இதனை கோவை மாவட்ட மக்களின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்.கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையின் நியாயத்தை ஒன்றிய அரசு உணர்ந்து உடனடியாக அதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இக்கோரிக்கையை வலுப்படுத்த நாடாளுமன்றத்திலும்,மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.