April 10, 2019 தண்டோரா குழு
கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சத்தி சாலையில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செகுர் வெல்யு என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததும், ஏடிஎம் மையங்களில் நிரப்ப பணம் எடுத்துச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.
எனினும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ள அதிகாரிகள், பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.