April 22, 2021
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற ஈமுகோழி மோசடி வழக்கில் நீண்ட காலமாக கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ள குற்றவாளிகள் வரும் 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிக்கையில்
கோவை வடவள்ளி அருணாநகர் பகுதியில் சூர்யா ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் கிருஷ்ணமூர்த்தி,அவரின் மனைவி நிர்மலா ஆகியோர் ஈமு கோழி பண்ணை நடத்தி வந்தனர்.இவர்கள் 193 முதலீட்டாளர்களிடம் இருந்து 3 கோடியே 24 லட்சத்து 85 ஆயிரத்து 304 ரூபாய் பெற்றுள்ளனர்.இதனை திருப்பித் தராமலும், மாத வருமானத்தையும் கொடுக்காமல் ஏமாற்றி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதுதொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருவரும் நீண்ட காலமாக இருந்து வந்தனர். அவர்கள் மீது கோவை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் நீண்டகாலமாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில்,கோவை டான்பீட் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வரும் 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் ஆஜராக வேண்டும்ஆஜராகத் தவறினால் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.