May 9, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெமிடிசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ள நிலையில் 63 நபர்களுக்கு மருந்துகளுக்கான டோக்கன்கள் இன்று வினியோகம் செய்யப்பட்டன.
கோவை, சேலம், மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை நேற்று தொடங்கியது.
இதற்காக மருத்துவமனை வளாகத்தில் பிரத்தியேகமாக 3 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று மருந்து வாங்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வயால் ரெமிடெசிவிர் 1568 ரூபாய்க்கும், 6 வயால் 9704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் பரிசோதனை சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளியின் ஆதார் நகல், மருந்து வாங்க வருவோரின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் வரும் நபர்களுக்கு மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு நோயாளிக்கு அதிகபட்சமாக 6 வயால் மருந்து பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வந்த 500 வயால் மருந்துகள் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரெமிடிசிவிர் மருந்து வாங்க மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அதிகாலை முதலே காத்திருந்த 63 நபர்களுக்கு, மருந்துகளுக்கான டோக்கன்கள் வினியோகம் மட்டுமே செய்யப்பட்டன. இன்று டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு நாளை மருந்துகள் வழங்கப்படுமென மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.