March 14, 2019 தண்டோரா குழு
திருப்பதி வெங்கடாசல பெருமாள் பக்தர்களின் வசதிக்காக கோவையிலிருந்து திருப்பதிக்கு ஏசி வசதியுடன் நவீன சொகுசு பேருந்து சேவையை ஆந்திர அரசு போக்குவரத்துக்கழகம் துவங்கியுள்ளது.
முன்னதாக கோவையிலிருந்து திருப்பதி காண சொகுசு பேருந்து சேவையை ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சித்தாபுதூர் பகுதியில் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தொழில் நகரமான கோவையில் இருந்து தினந்தோறும் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் திருக்கோயிலுக்கு சுமந்து செல்ல நேரடி போக்குவரத்து இல்லாமல் சிரமப்பட்டனர். இதற்காக ஆந்திர அரசு போக்குவரத்து கழகம் தினசரி பேருந்து சேவையை துவங்க திட்டமிட்டது. அதன்படி தினந்தோறும் இரவு ஒன்பது மணிக்கு கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து புறப்படும் பேருந்து காலை ஆறு முப்பது மணிக்கு திருப்பதி சென்றடையும். திருப்பதியில் இருந்து இரவு ஒன்பது மணிக்கு புறப்படும் பேருந்து கோவைக்கு மறுநாள் காலை ஆறு மணிக்கு வந்து சேரும் என கூறினார்.
மேலும், ஏசி வசதியுடன் சாய்வு இருக்கைகள் பேருந்தில் உள்ளதாகவும் கண்காணிப்பு கேமரா பயணிகளின் அவசர அழைப்பு மணி உள்ளிட்ட நவீன வசதிகளும் பயணிகளுக்கான அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்க உள்ளதாகவும் இதனால் திருப்பதி செல்லும் பயணிகளுக்கு தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பயண கட்டணத்துடன் வழங்குவதாகவும் தெரிவித்தார். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதியுடனான சொகுசு பேருந்து கூடுதல் பேருந்து இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் தற்போது தேவஸ்தான சிறப்பு தரிசன கட்டணத்துடன் சேர்த்து பயணக் கட்டணம் 867 ரூபாய் வசூலிக்கப்பட இருப்பதாகவும் இந்த கட்டணத்தில் எவ்வித மாறுபாடும் இருக்காது எனவும் உறுதியளித்தார்.