January 24, 2019 தண்டோரா குழு
கோமதி ஆற்றை சுத்தப்படுத்தும் கோமதி ரிவர் பிரண்ட் நிறுவனத்தில் இன்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
உ.பி.யின் தலைநகரான லக்னோவில் கோமதி ஆறு ஓடுகிறது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் இந்த நதியில் மாசு நிறைந்துள்ளது பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த ஆற்றை சுத்தம் செய்ய கோமதி அறு முன்னணி திட்டம் என்று உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் தொடங்கினார். இத்திட்டத்தில் உழல் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் நடந்த ஊழல் பற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐகோர்ட் நீதிபதி விசாரணை நடத்த கடந்த ஏப்ரல் 1ம் தேதி தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கோமதி ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட கோமதி ரிவர் பிரண்ட் நிறுவனத்தில் இன்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ மற்றும் நொய்டா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தானில் உள்ள அந்த நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் தஸ்தாவேஜ்கள் கைப்பற்றப்படலாம் என தெரிகிறது.
கோமதி ஆற்றை சுத்தப்படுத்துவதற்காக கடந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு, கோமதி ரிவர் பிரண்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. கோமதி ஆற்றை சுத்தப்படுத்தும் இந்த திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக உத்தரப்பிரதேச மாநில பாசனத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து அந்நிறுவனத்தின் பொறியாளர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தில் இன்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.