January 18, 2019 தண்டோரா குழு
கோடநாட்டில் ஆதாரம் இருந்தால் சசி குடும்பத்தினர், எங்களை சும்மா விடுவார்களா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை காட்டுப்பாக்கத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி,
மக்கள் மனதிலிருந்து எம்ஜிஆர் மறையவில்லை. தமிழகத்தில் உயர்க்கல்விக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர். இரண்டாக பிரிந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட ஒன்று சேரவில்லை. எம்ஜிஆர் மறைவின் போது உடைந்த இயக்கத்தை ஒன்றாக சேர்த்தவர் ஜெயலலிதா தான். சட்டமன்றத்தில் ஜெ.வை அவமதித்த நிகழ்வு திமுக ஆட்சியில் தான் நடந்தது. பல சோதனைகளை கடந்து தான் ஜெ. முதல்வராக பொறுப்பேற்றார்.
44 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் பணியாற்றி முதல்வரானவன் நான். 7 முறை சிறை சென்றவன் நான்; பொய் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சமாட்டேன். கோடநாடு விவகாரத்தில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீதே பொய் வழக்கு போடும் திமுக, ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்? கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஒட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது. ஜெ. மறைந்த பிறகு கோடநாடு தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோடநாடு சம்பவம் கூலிப்படையினர் செய்தனர். கோடநாட்டில் ஆதாரம் இருந்தால் சசி குடும்பத்தினர், எங்களை சும்மா விடுவார்களா! எதற்கும் அஞ்சமாட்டேன், கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவில் இருப்பேன்.
தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி திமுகவால் செய்யப்பட்ட நாடகம். கோடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு திமுக நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடு பொடியாக்கி காட்டுவேன். சயானுக்கு திமுகவினர் தான் ஜாமீன் எடுத்துக் கொடுத்துள்ளது. வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.பதவியில் இருந்தபோது கிராமங்களுக்கு செல்லாத மு.க.ஸ்டாலின் தற்போது கூட்டங்களை நடத்துகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.