August 14, 2019 தண்டோரா குழு
கொள்ளையரை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்க தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவர் தனியார் நூற்பாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செந்தாமரை (65). மூன்று நாட்களுக்கு முன் இரவு 9.30 மணியளவில் சண்முகவேல் வீட்டு வராண்டாவில் அமர்ந்து செல்போனில் மகனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு கொள்ளையன் நைசாக அங்கு வந்தான். அவன் திடீரென சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கினான். அதை பார்த்து வீட்டுக்குள் இருந்த செந்தாமரை வெளியே ஓடி வந்தார். அவர் நாற்காலி உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம்
எடுத்து கொள்ளையன் மீது எறிந்து தாக்கினார்.இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அருகில் இருந்த பொருட்களை எடுத்து கொள்ளையர்கள் மீது வீசினர். சண்முகவேல் மற்றும் அவரது மனைவி கொள்ளையர்களை விரட்டியடிக்கும் காட்சி அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதனை பார்த்த பலரும் வயதான தம்பதியினரின் வீரத்தை பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் இவர்களை நெல்லை மாவட்ட எஸ் பி.அருண்சக்திகுமார், நேரில் சென்று பாராட்டினார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் டுவிட்டரில் பாராட்டினர்.
இந்நிலையில், கொள்ளையர்களை விரட்டியடித்த மூத்த தம்பதிக்கு விருது வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். சென்னையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு தமிழக அரசின் வீர தீர விருதை முதலமைச்சர் விருது வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.