April 12, 2018
தண்டோரா குழு
பல்லாவரம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சீமான் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதுவரை சீமான் விடுவிக்கப்படாததால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்குகருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டு சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கைதானார்.
இதையடுத்து,அவர்களை பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதற்கிடையில்,மாலையில் அந்த மண்டபத்தை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டது.சீமானை கைது செய்ய போலீஸ் தயாராகி வருவது தெரிந்ததும்,நாம் தமிழர் கட்சியினர் பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா மண்டபத்திற்கு விரைந்தனர்.இதனால் அங்கு பரபரப்பாக சூழல் ஏற்பட்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,கடந்த 10-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடைபெற்ற ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.அங்கு போலீஸார் மீது நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ வெளியானது.இந்த வழக்கும் நிலுவையில் உள்ளதால் தமிழக சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக சீமானை கைது செய்யும் முயற்சியில் மண்டபத்தை சுற்றியும் காவல்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில்,இந்த தகவலறிந்த காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி,தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு,தமிழர் தேசிய முன்னணி பாரதிச்செல்வன் உள்ளிட்டோர் சீமானை கைது செய்யவிட மாட்டோம் என மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதைபோல்,சீமான்,வெற்றிமாறன்,அமீர் உள்ளிட்டோரை விடுவித்தால் மட்டுமே வெளியே செல்வேன் என பாரதிராஜாவை காவல்துறையினர் விடுவித்தும் மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்,பல்லாவரத்தில் சீமான் தங்கவைக்கப்பட்ட மண்டபம் அருகே போராட்டம் நடத்திய மன்சூர்அலிகான் உதயகுமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.