October 21, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனாவால் உயிரிழந்த 22வயது இளைஞர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, கோவிலூர் ரத்தினகிரியூர் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் கணேஷ், திருப்பூர் மாவட்டத்தில் மங்களத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றி வந்தார். கொரோனா அறிகுறி காரணமாக கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி கோவை ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்,24ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான, இவருக்கு 4 சகோதரிகள் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒரே ஆண் வாரிசையும் பரிகொடுத்து குடும்பம் தவித்தது. இந்நிலையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் ரூ.50 லட்சம் நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீடு நிறுவனம் மூலம் உயிரிழந்த 108 உதவியாளர் கணேஷ் தந்தையின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், GVK EMRI pvt ltd சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நோயாளிகளுடன் நேரடி தொடர்பு, கட்டுப்படுத்தும் பணிகளில் நேரடியாக பணிபுரியும் முன் கள பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், முதல் முறையாக உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.