June 18, 2020 தண்டோரா குழு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் பாலமுரளிக்கு கோவை காவல்துறையினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் அனைத்து காவல்துறையினரும் பணி இடத்தில் இருந்து இன்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்திருந்தார். மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த பாலமுரளிக்கு கடந்த 4ம் தேதி கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக கிண்டி ஐஐடி தனிமைப்படுத்துதல் முகாமில் சேர்க்கப்பட்ட அவர், ஏற்கனவே நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், 6ம் தேதி பாலமுரளிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 9ம் தேதி இரவு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். தொடர்ந்து, உயிரிழந்த பாலமுரளியின் உடலுக்கு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைந்த ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி வலியுறுத்திய நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ள பந்தயசாலை காவல்நிலைய போலீசார் உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் மறைந்த பாலமுரளி திருவுரு படத்திற்கு மலர் தூவி 2நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.