January 21, 2019 தண்டோரா குழு
கேரளாவின் ‘அக்ஷரலக்ஷம்’ என்ற திட்டத்தின் மூலம் படித்து 96 வயதில் 98 மதிப்பெண்கள் எடுத்த கார்த்தியாயினி அம்மா காமன்வெல்த் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா அரசு ‘அக்ஷரலக்ஷம்’ என்கிற கல்வி கற்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் படிப்பைத் தவறவிட்டவர்கள் மீண்டும் கல்வி கற்கும் வகையில் இத்திடம் செயல்படுத்தப்பட்டது. இதில் குடும்பச்சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்ட முதியவர்கள் பலர் கல்வி பயின்று வருகின்றனர்.
சமீபத்தில் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயதான மூதாட்டி இந்த அக்ஷரலக்ஷம்’ மூலம் கல்வி பெற்று அப்போது நடத்தப்பட்ட தேர்வை எழுதினர். 96 வயதான இவர் தமது வயதின் எண்ணிக்கையை விட இரண்டு மதிப்பெண் என 100-க்கு 98 மதிப்பெண் பெற்றார். இவரை நேரில் அழைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாராட்டு தெரிவித்தார்.
பிறகு தேர்வில் 98 மதிப்பெண் பெற்ற கார்த்தியாயினி அம்மா கணினி இயக்க வேண்டும் என ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதை அறிந்த கேரளா கல்வித்துறை அமைச்சர் சி. ரவீந்திரநாத் அவருக்கு மடிக்கணினியை பரிசாக வழங்கினார். சிறு வயதிலே கணவனை இழந்த கார்த்தியாயினி அம்மா தனது 60 வயது மகளிடம் இருந்து படிக்கும ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் கார்த்தியாயினி அம்மாவை கௌரவிக்கும் வகையில் காமென்வெல்த் அமைப்பு கல்விக்கான நல்லெண்ண தூதராக அவரை நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, காமென்வெல்த் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளில் தொலைதூர கல்வியை மேம்படுத்தும் வகையில் கார்த்தியாயினி அம்மா நல்லெண்ணத் தூதராக செயல்படுவார்.