November 11, 2025
தண்டோரா குழு
முன்னணி பல்துறை மருத்துவமனையாக விளங்கும் கேஎம்சிஹெச் தனது சமூக கடமைகளில் (CSR) ஒரு பகுதியாக வீரியம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ.2 கோடியே 18 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 7 வகுப்பறைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தனி தனியே கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தாம் வசிக்கும் வீரியம்பாளையம் அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் தொடர்ந்து சமூக சேவைகள் ஆற்றி வருகிறார். அதன் அடிப்படையில் சில வருடங்களுக்கு முன்னர் இதே பகுதிக்கு பல உதவிகள் செய்துள்ளார்.
இந்த புதிய பள்ளிக் கட்டிடத்தின் திறப்புவிழா நவம்பர் 10-ம் தேதி நடைபெற்றது.கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் புதிய பள்ளிக் கட்டிடத்தை திறந்துவைத்தார்.கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமசந்திரன், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி,துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உரையாற்றிய டாக்டர் நல்லா ஜி பழனிசாமி,கல்வி மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளில் கேஎம்சிஹெச் தொடர்ந்து அக்கறையுடன் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.அதில் சமீபத்தில் கோவை மாவட்டம் வடமதுரை மற்றும் கழிக்கநாயகன்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளிக்கட்டிடம்,ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டியில் ரூ.2 கோடியே 11இலட்சம் மதிப்பில் புதிய பள்ளிக்கட்டிடம்,கோவை மாவட்டத்தில் அமையவுள்ள உலகத்தர கிரிக்கெட் மைதானத்திற்கு ரூ.1கோடி நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளது என்றும் இம்முறையான சமூக பணிகள் செய்வதன் மூலம் மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கும் அவர்கள் முன்னேற்றத்திற்கும் உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில்,
ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்திப் பலன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சமூக கடமை நிதியினை (CSR) பிற்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செலவிடுவதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.