April 11, 2019 தண்டோரா குழு
பெங்களூருவில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞனை, காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பூ கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்- ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. அங்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய பெங்களூரு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து அவர் நேற்று பிரச்சாரம் செய்தார். கூட்டத்திற்கு மத்தியில் அவர் நடந்து சென்றார்.
அப்போது அவருக்குப் பின்னால் இருந்து ஒரு நபர் அவரைத் தவறான முறையில் தொடுவதற்கு முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குஷ்பூ, ஆக்ரோசத்துடன் அந்த இளைஞனை கன்னத்தில் அறைந்தார்.இதை அடுத்து அந்த இளைஞன் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.