• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தையின் அரிதான இதயக்கோளாறை குணமாக்கி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

June 24, 2020 தண்டோரா குழு

கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக சிவகாசியைச் சேர்ந்த, பிறந்து 9 மாதமே ஆன 6 கிலோ எடை கொண்ட குழந்தை அனுமதிக்கப்பட்டது.மருத்துவமனைக்குக் கடுமையான மூச்சுத்திணறலுடன் எடுத்துவரப்பட்ட குழந்தை சற்று நேரத்தில் மூச்சு விடுவதை நிறுத்தியதும் உடனடியாக தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, குழந்தை இதயவியல் நிபுணர் டாக்டர் தேவ பிரசாத் தலைமையில் அமைந்த குழுவால் குழந்தைக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டது.மேற்கொண்டு பரிசோதித்ததில் குழந்தை லட்சத்தில் ஏழு பேருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய டெட்ராலஜி ஆப் ஃபாலட் வித் பல்மனரி அட்ரிஸியா எனும் அரியவகை பிறவி இதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையின் இதயத்தில் பெரியதுளை இருந்ததால் நுரையீரலுக்கு ரத்தம் செல்வதில் தடை ஏற்பட்டு இருந்தது. மாற்று வழியில் ரத்தம் நுரையீரலுக்கு சென்று கொண்டிருந்ததால் குழந்தை இதுவரை உயிர் பிழைத்து வந்துள்ளது. எனவே, உடலில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, இதயச் செயலிழக்கும் (கார்டியாக் அரெஸ்ட்) நிலையை நோக்கிச் சென்றது.

இந்த நிலையில் அவசர அறுவை சிகிச்சை மட்டுமே குழந்தையின் உயிரைக் காக்கும் என்பதால் உடனடியாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இதய அறுவைசிகிச்சை நிபுணர்களான டாக்டர் தியாகராஜ மூர்த்தி, டாக்டர் விஜய் சதாசிவம், டாக்டர் ரீனஸ், டாக்டர் கார்த்திக் குமரன் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் நரேந்திர மேனன், டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழுவினை அமைத்து குழந்தையின் இதய கோளாறை மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தனர்.

இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் “பிளேலாக்-டாஸ்ஸிக் சன்ட்” என்ற தற்காலிக அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு, முழுமையாக சரி செய்யும் அறுவை சிகிச்சை பின்னாளில் மேற்கொள்ளப்படுவதே மருத்துவத் துறையில் வழக்கமாக இருந்து வருகிறது.குழந்தையின் நலன் கருதி இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகளில் அனுபவமும் திறமையும் வாய்ந்த மருத்துவக்குழுவாக இருந்ததால் குழந்தையின் இதய கோளாறு, ஒரே அறுவை சிகிச்சையில் முழுமையாக சரி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவத் துறையில் இத்தகைய அறுவை சிகிச்சை மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
தற்போது இதயக்குறைபாடு, நுரையீரலின் ரத்த ஓட்டச் சிக்கல் ஆகியவை திறமையாக கையாளப்பட்டு, குழந்தையின் உடல்நிலை சீராகியுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரத்தில் குழந்தை முழுவதுமாக குணமடைந்து தற்போது வீடு திரும்ப தயாராக உள்ளது. திறமை வாய்ந்த மருத்துவ குழு, செவிலியர்களின் உதவி மருத்துவமனை நிர்வாகம் தந்த ஊக்கம் ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் இக்கடினமான சிகிச்சையில் வெற்றிகண்டு ஒரு குழந்தையின் உயிரையும் காத்த இந்த நிகழ்வு கோவிட் தொற்று போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க