February 8, 2019 தண்டோரா குழு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடும்பத் தகராறு காரணமாக, 150 அடி உயரமுள்ள உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி அடுத்த செல்வாய்பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷூக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்தது வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று மீண்டும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் அருகில் உள்ள 150 அடி உயர உயர்மின் கோபுரம் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக ரமேஷ் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து , ரமேஷூடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு அவரின் மனைவி குழந்தைகளை அழைத்து வந்து செல்போன் முலம் பேச வைத்து அவரின் மனதை மாற்ற முயற்சி செய்தனர்.
5 மணிநேரமாக நடைபெற்ற சமரச முயற்சி பலனளிக்காததால் உயர்மின் கோபுரத்தில் இருந்து ரமேஷ் கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் ரமேஷின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ரமேஷ் உடலை பார்த்து, அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.