August 4, 2021
தண்டோரா குழு
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி ஆர்.ஐ. மாவட்டம் 3201,மூன்று முக்கிய சேவை திட்டங்களை இன்று துவக்கியுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு இது பயனுள்ள வகையில் இருக்கும். தொழில் பயிற்சி, விவசாய சமுதாயத்திற்கு உதவுதல் மற்றும் அன்னதானம் ஆகிய இந்த மூன்று திட்டங்களும் துவங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி ஆர்.ஐ. மாவட்டம் 3201 தலைவர் டாக்டர் இசட். முகமது இர்பான் துவக்கி வைத்து பேசுகையில்,
“மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த “விவசாய சமுதாயத்திற்கு உதவுதல்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தேனீ வளர்ப்புக்கென தேன் சேகரிக்கும் பெட்டிகள் அமைத்தல். மண் பரிசோதனை செய்தல், இயற்கை வழி விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் வழங்குதல். விவசாயிகள் தங்களுக்கு தேவையான இயற்கை உரங்களை தயார் செய்யும் முறைகள் பற்றி கற்றுத்தரப்படும்.
மண்புழு உரம் தயாரிக்கவும், பஞ்சகவ்யா தயாரிக்கவும் துவங்க ஆரம்ப கட்ட பொருட்கள் வழங்கப்படும். ரசாயண உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கவும் கற்றுத்தரப்படும். பொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும். ஆர்சிசி டெக்சிட்டி 20 பண்ணைகளை தேர்வு செய்து, மதுக்கரை வேளாண் உதவி இயக்குனர் பேராசிரியர் ரத்தினம் மற்றும் வேளாண் பல்கலைக் கழகத்தின் கள நிபுணர்களுடன் இணைந்து செயலாற்றும்,” என்றார்.
இதற்காக டெக்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் மற்றும் விவசாயிகள் பிரதிநிதி செல்வராஜ் ஆகியோர் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கவர்னர் ராஜசேகர் ஸ்ரீனிவாசன், மாவட்ட முன்னுரிமையின் மாவட்ட சேர்மன் எஸ்.மாருதி முன்னிலையில் விவசாயிகள் பிரதிநிதிகளுக்கு வேளாண் உபகரணங்களை வழங்கினார்.
தொழில் சேவை பிரிவு மாவட்ட தலைவர் ஆர். முத்துராமன், தொழிற்பயிற்சி புத்தகத்தை மாணவர் பிரதிநிதிகளுக்கு வழங்கினார்.
திட்ட தலைவர் நாகராஜன் பேசுகையில்,
“கிராமப்புற மக்களுக்கு டேலி, போட்டோஷாப் மற்றும் ரோட்டரி கிளப் தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து சில மென்பொருள் கல்வியும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் தையல் கலையும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு வேடபட்டியில் நேரடி பயிற்சி வழங்கப்படும். இந்த ஆண்டு, மெய்நிகர் காட்சி வழியில் நடத்தப்படுகிறது. 30-40 மாணவர்களைக் கொண்ட குழுவாக பிரித்து பயிற்சிகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 100 – 120 மாணவர்களுக்கு பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் ஒவ்வொருவரும் சுய சார்புடன் செயல்பட இது உதவியாக இருக்கும்,” என்றார்.
அன்னதான திட்டத்தின் தலைவர் ரமேஷ் பொன்னுசாமி பேசுகையில்,
“பல்வேறு இல்லங்களில் உள்ளவர்கள், குடிசை வாழ் மக்கள், தெருவில் வசிக்கும் மக்கள் என அனைவருக்கும் ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. ஆர்சிசி டெக்சிட்டி மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தி ஐ பவுண்டேஷன் உடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக அன்ன தானம், தானிய தானமாக வழங்கப்பட்டு வந்தன. தற்போது ஐ பவுண்டேஷனுடன் இணைந்து வேறு விதமாக வழங்கப்படுகிறது,” என்றார்.
கிளப் பொது தொடர்பு இயக்குனர் மேனகா வைரவன் பேசுகையில்,
“விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சி திட்டங்களும், கிளப் இணையத்தளத்தில் இடம் பெறும். நேரடியான மற்றும் மெய்நிகர் வாயிலாக நடக்கும் பயிற்சி திட்டங்களும் இடம் பெறும். இவை எல்லை கடந்து அனைத்து விவசாயிகளும் பார்வையிட்டு பயன்பெறலாம். குரும்பபாளையம், பிற மக்களும் பயன்பெறும் வகையிலான முன் மாதிரி கிராமம், என்றார்.
இந்த நிகழ்வில், ரோட்டரி கிளப் டெக்சிட்டி ரோட்டரி மாவட்டம் 3201 ன் செயலாளர் எம்டி முகமது சபி, ரோட்டரி உறுப்பினர்கள் பிரிஜேஷ், இளங்கோவன், வைரவன் மற்றும் ஜிஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.