February 20, 2019
தண்டோரா குழு
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப் படையினரால் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடந்து ஒரு சில தினங்களே ஆன நிலையில், ராணுவத்தில் இணைய ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பாரமுல்லா பகுதியில் 111 பணியிடங்களுக்கு, 2,500 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், வழக்கத்திற்கு மாறாக ராணுவத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு, அப்பகுதியில் நிலவும் வேலை வாய்ப்பின்மையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆகையால், எந்த வேலை கிடைத்தாலும் தற்போதைய சூழலில் போதும் என்ற மனநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ராணுவத்தில் சேர சி.டி.எஸ். தேர்வில் பங்கேற்க வேண்டும். பின் மருத்துவம், உடல் தகுதி தேர்வுகள் நடக்கும். தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்டாஃப் செலெக்ஷன் போர்டு நடத்தும் நேர்முக தேர்வில் பங்கேற்பார்கள். இதில், தேர்வானவர்களுக்கு சம்பந்தப்பட்ட இன்ஸ்டியூட்டில் இருந்து அழைப்பு வரும். மேலும், மூன்று வகைகளில் பெண்கள் தேர்வாகிறார்கள். அவை, தொழில்நுட்பம், தொழில்நுட்பமில்லாத பிரிவு, சட்டம் ஆகியவை ஆகும்.
குறிப்பாக, ஒவ்வொரு ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை பணயம் வைத்தே வேலை செய்கிறார்கள். இன்றோ, நாளையோ தாக்குதல் நடைபெறலாம். அப்படியிருக்க, தேசப்பற்று இல்லாத ஒருவரால் எப்படி அந்த பணியில் இணைய முடியும். ஆகையால், வேலை வாய்ப்பின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுவே, முழுமைக்கும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.