July 23, 2018
தண்டோரா குழு
சென்னை சேத்துப்பட்டு பகுதியில்,கடந்த 19ம் தேதி நடந்த வாகன சோதனையின் போது எஸ்.ஐ இளையராஜா தாக்கியதில் முகமது ஆரூண் சேட் என்ற இளைஞர் காயமடைந்தார்.
சென்னை சூளைமேடு மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட்(19).இவர் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த 19ம் தேதி மாலை ராயப்பேட்டையில் உறவினர் இல்லத் திருமணம் ஒன்றுக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது,சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் காவலர்கள் ஆரூணை தடுத்துள்ளனர்.வாகனத்தின் ஆவணத்தை காட்டச்சொல்லி எஸ்.ஐ இளையராஜா கேட்டுள்ளார்.ஆவணங்களைக் காட்டிய பின்னரும் அவர்களை அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளார்.
பின்னர் ஆரூண் ரசீது கேட்டதற்கு எஸ்.ஐ இளையராஜா மற்றும் உடனிருந்த காவலர்களை ஆரூணை கடுமையாக தாக்கியுள்ளனர்.காயம் காரணமாக எழுந்து செல்ல முடியாமல் இருந்த ஆரூண் தனது தாயாருக்கு நள்ளிரவில் போன் செய்து வரவழைத்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதையடுத்து,தனக்கு நேர்ந்த கொடுமையைப் புகாராக சென்னை மாநாகரகாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு ஆரூண் அனுப்பி வைத்துள்ளார்.இச்சம்பவத்தை அறிந்தவுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநான் விசாரணைக்கு உத்தரவிட்டு,பொதுமக்களிடம் அத்துமீறியதற்காக எஸ்.ஐ இளையராஜா சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்நிலையில்,காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநான் இன்று காயமடைந்த இளைஞர் முகமது ஆருண் சேட்டை அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து வருங்காலங்களில் இவ்வாறான செயல் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.