October 20, 2021
தண்டோரா குழு
கோவையில் ராணுவ அதிகாரி என்று கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் டேவிட் ஜான் (26). டிரைவர். இவர் பழைய கார் ஒன்றை வாங்குவதற்காக (ஓ.எல்.எக்ஸ்) இணையதளத்தில் தேடியுள்ளார். அதில், இன்னோவா கார் விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விளம்பரத்தில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு கார் மாடல், விலை உள்ளிட்ட விவரங்களை டேவிட் ஜான் கேட்டுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ராணுவ அதிகாரி என கூறி அறிமுகப்படுத்தி பேசியுள்ளார். மேலும் கார் வாங்குவதற்கு முன்பணமாக ரூ.99,400 அனுப்பும் படி தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து டேவிட் ஜான் அந்த நபர் கூறிய செல்போன் எண்ணுக்கு ‘போன் பே’ மூலமாக ரூ.99,400 அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டேவிட் ஜான் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற நூதன மோசடியில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. எனவே, மோசடி நபர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.