October 28, 2017
தண்டோரா குழு
காத்மாண்டுநகரில் ஓடும் திரிசூல் ஆற்றில், பேருந்து கவிழ்ந்து விழுந்ததில்,14 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டுவிலிருந்து,ராஜ்பிராஜ் நகருக்கு, 50பயணிகளை கொண்ட பேருந்து ஒன்று, இன்று(அக்டோபர் 28) காலை சென்று கொண்டிருந்தது.அந்த பேருந்து, காத்மாண்டு நகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காட்பேசி பஞ்சே பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்ததால், அந்து பேருந்து திரிசூல் ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில், அதில் பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதியில் இருந்த மக்கள் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடனே, இந்த விபத்து குறித்து அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அவர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து,மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்துகாவல்துறை அதிகாரி கூறுகையில், “அந்த பேருந்தில் மொத்தம் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆற்றில் மூழ்கிய 14 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அதில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளின் உடல் அடங்கும். நீச்சல் தெரிந்த 15 பேர், நீந்தி கரையை அடைந்தனர்.இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது”என்று கூறினார்.